மதுரை: உசிலம்பட்டி அருகே முதலைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட கீழப்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மற்றும் குடிநீர் தொட்டி வேண்டுமென மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் கீழப்பட்டியில் அரசு நிலத்தில் அங்கன்வாடி மற்றும் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு அலுவலர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதற்கிடையே அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அதனை மீட்க ஊராட்சி மன்றத் தலைவர் பூங்கொடிபாண்டி, கோட்டாட்சியருக்குத் தகவல் அளித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில், கோட்டாட்சியர் ராஜ்குமார் உத்தரவின் பேரில், வட்டாட்சியர் விஜயலட்சுமி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கன்வாடி மையம் கட்ட அடித்தளம் போட்டு, பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்கிரமிப்பாளர்கள் அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதுடன், ஊராட்சி மன்றத் தலைவரின் வீடு, வாகனத்தை உடைத்து சேதப்படுத்தினர்.
மேலும் கான்கிரீட் இயந்திரத்தையும் உடைத்தனர்.
இதனால் உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுசெய்தவர் கைது